திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.61 திருக்கன்றாப்பூர் - திருத்தாண்டகம்
மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா
    மதிசூடி வானவர்கள் தங்கட் கெல்லாம்
நாதனே யென்றென்று பரவி நாளும்
    நைந்துருகி வஞ்சகமற் றன்பு கூர்ந்து
வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு
    வைகல் மறவாது வாழ்த்தி யேத்திக்
காதன்மையாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே
    கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
1
விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி
    வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச்
செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பா யென்றுஞ்
    செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந்
துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ்
    சுடலைதனில் நடமாடுஞ் சோதி யென்றுங்
கடிமலர்தூய்த் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
    கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
2
எவரேனுந் தாமாக விலாடத் திட்ட
    திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி
உவராதே அவரவரைக் கண்ட போது
    உகந்தடிமைத் திறநினைந்தங் குவந்து நோக்கி
இவர்தேவ ரவர்தேவ ரென்று சொல்லி
    இரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக்
கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
    கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
3
இலங்காலஞ் செல்லாநா ளென்று நெஞ்சத்
    திடையாதே யாவர்க்கும் பிச்சை யிட்டு
விலங்காதே நெறிநின்றங் கறிவே மிக்கு
    மெய்யன்பு மிகப்பெய்து பொய்யை நீக்கித்
துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம்
    உண்டபிரா னடியிணைக்கே சித்தம் வைத்துக்
கலங்காதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
    கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
4
விருத்தனே வேலைவிட முண்ட கண்டா
    விரிசடைமேல் வெண்டிங்கள் விளங்கச் சூடும்
ஒருத்தனே உமைகணவா உலக மூர்த்தி
    நுந்நாத வொண்சுடரே அடியார் தங்கள்
பொருத்தனே யென்றென்று புலம்பி நாளும்
    புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக்
கருத்தினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே
    கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
5
பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப்
    பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று
பசியினால் மீதூரப் பட்டே யீட்டிப்
    பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார்
வசியினா லகப்பட்டு வீழா முன்னம்
    வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக்
கசிவினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே
    கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
6
ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு
    ஆவியார் போவதுமே அகத்தார் கூடி
மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி
    மயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சுடும்
ஐயனார்க் காளாகி அன்பு மிக்கு
    அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்
கையினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே
    கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
7
திருதிமையால் ஐவரையுங் காவ லேவித்
    திகையாதே சிவாயநம என்னுஞ் சிந்தைச்
சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக்
    கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப்
பருதிதனைப் பற்பறித்த பாவ நாசா
    பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங்
கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
    கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
8
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
9
குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தா யென்றுங்
    கூற்றுதைத்த குரைகழற்சே வடியா யென்றுந்
தனஞ்சயற்குப் பாசுபத மீந்தா யென்றுந்
    தசக்கிரிவன் மலையெடுக்க விரலா லூன்றி
முனிந்தவன்றன் சிரம்பத்துந் தாளுந் தோளும்
    முரணழித்திட் டருள்கொடுத்த மூர்த்தி யென்றுங்
கனிந்துமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
    கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com